ஈசூன் புளோக்கில் வசிப்போருக்கு கொவிட்-19 பரிசோதனை
ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரும் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த புளோகில் ஒரு சிலருக்குத் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் அந்த புளோக்கின் குடியிருப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், புளோக் 745 யீசூன் ஸ்திரீட் 72ல் வசிப்பவர்களின் பாதுகாப்பையும் நலனையும் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக நீ சூன் குழுத்தொகுதிக்கான அடித்தள ஆலோசகர் முகம்மது ஃபைஷால் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
புளோக் 745க்கு அக்கம்பக்க புளோக்குகளில் வசிப்போர் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள அவசியமில்லை என்றார் அவர். மே 15 முதல் மே 24ஆம் தேதி வரை புளோக் 745ல் வசிக்கும் குடும்பங்களைப் பார்க்க சென்றவர்கள் மட்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
“புளோக் 745ல் உள்ள பொதுவான பகுதிகளை நீ சூன் நகர மன்றம் முழுமையாக சுத்தப்படுத்தியுள்ளது,” என்று டாக்டர் ஃபைஷால் தெரிவித்தார்.