சீனாவின் வூஹான் நகரில் மீண்டும் தலைகாட்டும் கொரோனா
உலகையே நிலைகுலையச் செய்து இன்னமும் அச்சுறுத்தலாக இருந்துவரும் கொரோனா கிருமித்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
நேற்று அங்கு ஏழு சமூகத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நகரில் உள்ள ஒட்டு மொத்த மக்களுக்கும் கொரோனா தொற்றுச் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வாழும் 11 மில்லியன் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் கூறினர்.
2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த அங்கு முழுமையான முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அங்கு சமூகத்தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. பின்னர் ஓராண்டு கழித்து இப்போது வெளிநாட்டு ஊழியர்களிடையே சமூகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் அண்மைய காலங்களில் பெரிய அளவில் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து அங்கு தொற்றைக் கண்டறிய தீவிர சோதனை மேற்கொள்ளும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.