உள்ளூரில் புதிதாக 94 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று
உள்ளூரில் இன்று (ஆகஸ்ட் 23) பிற்பகல் நிலவரப்படி புதிதாக 94 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் 59 பேர், உட்லண்ட்சில் உள்ள நார்த் கோஸ்ட் லாட்ஜ் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியுடன் தொடர்புடையவர்கள். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 21) முதல் அங்கு கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டு வந்ததைத் தொடர்ந்து அங்கு பலருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அட்டவணைப்படுத்தப்பட்ட கிருமித்தொற்றுப் பரிசோதனையின்போது ஒரே நாளில் அந்த விடுதியில் மூவருக்குத் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை அந்த விடுதியில் ஏறக்குறைய 2,200 ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 3,200 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த விடுதியில் வசிக்கும் அனைவருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்று உறுதியானவர்களிடம் பெரும்பாலானோருக்கு தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை அல்லது இலேசான அறிகுறிகளே தென்பட்டன.
உள்ளூரில் கிருமித்தொற்று உறுதியான எஞ்சிய 35 பேரில் 16 பேர், முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டனர்.
எஞ்சிய 19 பேருக்கு எப்படி கிருமி தொற்றியது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
உள்ளூரில் கிருமி தொற்றியவர்களில் இருவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 70 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர். அவர்களுக்குக் கடுமையான நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நான்கு பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் வந்திறங்கியபோது அவர்களில் இருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இங்கு வந்த பிறகு தங்குமிடத்தில் இருக்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்தபோது எஞ்சிய இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 66,576ஆக உள்ளது.