சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் திட்டம் சிறப்பான, துரிதமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டதால் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது என்று கூறுவது போல மரண எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போகும் நிலை தவிர்க்கப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் இம்மாதம் மட்டும் பத்து பேர் மாண்டுவிட்டனர். கிட்டத்தட்ட நான்கில் மூன்று பேர்
முழுமையாகத் தடுப்பூசி
போட்டுள்ளபோதிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று முதன்முதலாகத் தலைதூக்கியதிலிருந்து கடந்த ஜூலை மாதம் வரை அந்நோயின் காரணமாக 37 பேர் மாண்டனர்.
அந்தக் காலகட்டத்தில் 64,000க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இந்நிலையில், சிங்கப்பூரில் கொவிட்-19 மரணங்கள் திடீரென அதிகரித்திருப்பதற்கு டெல்டா கிருமி வகைதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக அளவில் இவ்வகை கிருமி பரவி வருகிறது. சாதாரண கொவிட்-19 கிருமியைவிட இந்த உருமாற்றம் கண்ட டெல்டா கிருமி வகை இரண்டிலிருந்து நான்கு மடங்கு வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடியது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா கிருமி வகையால் பாதிக்கப்பட்டோர், கடுமையான பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, சாதாரண கொவிட்-19 கிருமிக்கு எதிராகப் பாதுகாப்பு தரும் அளவுக்கு டெல்டா கிருமி வகைக்கு எதிராக தடுப்பூசிகளால் பாதுகாப்பு தர முடியவில்லை.
இருப்பினும், டெல்டா கிருமி வகைக்கு எதிராகக் கணிசமான அளவுக்கு தடுப்பூசிகளால் பாதுகாப்பு கொடுக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டது.
மரணம் ஏற்படும் அபாயத்தை அதனால் வெகுவாகக் குறைக்க முடிவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஈரச்சந்தை போன்ற மூத்தோர் அதிகம் செல்லும் இடங்களில் சமூக அளவில் கிருமி பரவியதால் அண்மையில் கொவிட்-19 மரணங்கள் அதிகரித்திருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்
கழகத்தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார். கொவிட்-19 காரணமாக உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்றும் மாண்ட முதியவர் ஒருவர் மட்டும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவ மனையின் மூத்த தொற்றுநோய் எதிர்ப்பு ஆலோசகரான பேராசிரியர் டேல் ஃபிஷர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போடும் திட்டம் முழுவீச்சுடன் நடை
முறைப்படுத்தப்படுவதற்கு முன் டெல்டா கிருமி வகை பரவி
இருந்தால் நிலைமை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாகியிருக்கும் என்றும்
ஆயிரக்கணக்கானோர் மடிந்
திருக்கக்கூடும் என்றும் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் அலெக்ஸ் குக் தெரிவித்தார்.
பலர் தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் மேலும் பல மூத்தோரும் ஏற்கெனவே மற்ற நோய்
களால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் உயிரிழந்திருப்பர் என்று மருத்துவப் பயிற்சிக் கழகத்தின் தொற்றுநோய் எதிர்ப்பு மருத்துவர்களுக்கான பிரிவின் தலைவர் டாக்டர் அஷோக் குரூப் தெரிவித்தார்.
சிறிதளவு மெத்தனத்துடன் இருந்தால் போதும், டெல்டா கிருமி வகை மளமளவென
பரவிவிடும் என்றார் அவர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் போட்டுக்கொள்ளாதோரும் டெல்டா கிருமி வகையால் பாதிக்கப்படலாம் என்றார் அவர்.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் சாத்தியம் குறைவு என்று அவர் தெரிவித்தார். டெல்டா கிருமி வகையால் பாதிக்கப்பட்டு தேசிய தொற்றுநோய் எதிர்ப்பு நிலையம் அல்லது சிங்கப்பூரில் இருக்கும் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ட்ட 218 பேரிடம் கடந்த ஏப்ரல் மாதத்துக்கும் ஜூலை மாதத்துக்குள் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.
அதற்கு தேசிய தொற்றுநோய் எதிர்ப்பு நிலையத்தின் சிங்கப்பூர் தொற்றுநோய் ஆய்வுக் கட்டமைப்பின் தலைவர் டாக்டர் பார்னபி யங் தலைமைதாங்கினார்.
தடுப்பூசி போட்டுக்கொண் டோரின் சராசரி வயது 56 என்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரின் சராசரி வயது 39.5 என்றும் ஆய்வில் தெரியவந்தது
குறைந்த வயது என்றபோதிலும் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களில் 26.2 விழுக்காட்டினருக்கு உயிர்வாயு சுவாசக் கருவி அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தேவைப்பட்டதாக ஆய்வு தெரிவித்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 2.8 விழுக்காட்டினருக்கு மட்டுமே இந்த நிலை ஏற்பட்டது.
இம்மாதத்தில் மட்டும் கொவிட்-19 காரணமாக பத்து பேர் மாண்டபோதிலும் கட்டுப்பாட்டுத் தளர்வுகளுக்கான திட்டத்தை சிங்கப்பூர் தொடர்கிறது.
பல நாடுகளுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதத்துக்குள் சிங்கப்பூர் மக்கள்தொகையில் 82 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருப்பர்.