கொவிட்-19 தொற்றைக் குணப்படுத்தும் மாத்திரைகளை வாங்கும் மலேசியா
கொவிட்-19க்கு சிகிச்சையளிக்க உதவும் ‘மோல்னுபிரவிர்’ மாத்திரைகளை அமெரிக்காவின் ‘மெர்க்’ என்ற மருந்துத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வாங்க மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 150,000 மாத்திரைகளை மலேசியா வாங்கவிருக்கிறது. மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 7) இதனைத் தெரிவித்தது.
“கொவிட்-19 கிருமியுடன் வாழும் நிலையை நோக்கிச் செல்லும் நாம், அதற்குத் தயார்ப்படுத்தும் பணிகளின் ஒரு பகுதியாக இந்த மாத்திரைகளை வாங்க முடிவு எடுத்துள்ளோம்,” என்றார் அவர்.
எனினும், இந்த மாத்திரைகளை வரவழைப்பதால் தடுப்பூசிகள் இனி தேவைப்படாது என்று அர்த்தமாகிவிடாது என்பதை திரு கைரி தெளிவுபடுத்தினார். கிருமித்தொற்றைத் தவிர்க்கவும் கிருமித்தொற்றால் ஏற்படும் பாதிப்பைக் குறைவுக்கவும் தடுப்பூசிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் சொன்னார்.
“மோல்னுபிரவிர் மாத்திரைகளால் தொற்றைத் தவிர்க்க இயலாது. ஏற்கெனவே தொற்றுக்கு ஆளானவர்களுக்கே இவை பலன்தரும். எனவே, தொற்றுப் பாதிப்பை மட்டுப்படுத்த தடுப்பூசிகள், மாத்திரைகள் இவ்விரண்டும் நமக்குத் தேவை,” என்றார் திரு கைரி.