கொவிட்-19 தொற்று காரணமாக 68 முதல் 102 வயதிற்குட்பட்ட பெண்கள் மூவர் மாண்டுவிட்டனர். இதனையடுத்து, சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 133ஆக உயர்ந்தது.
அப்பெண்கள் மூவரும் தடுப்பூசி போட்டிருக்கவில்லை.
தொடர்ந்து 17வது நாளாக கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
நேற்று புதன்கிழமை புதிதாக 3,577 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களில் 2,932 பேர் சமூகத்தில் இருப்போர், 630 பேர் விடுதிகளிலுள்ள வெளிநாட்டு ஊழியர்கள், 15 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல் பதிவாகி இருக்கிறது.
இதனையடுத்து, ஒட்டுமொத்த கிருமித்தொற்று பாதிப்பு 113,381 ஆனது.
நேற்று நண்பகல் நிலவரப்படி, கொரோனா தொற்றுக்காக 1,520 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 255 பேர்க்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது; 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
எட்டுப் பெரிய கிருமித்தொற்றுக் குழுமங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவற்றுள், ஆக அதிகமாக ஜூரோங்கில் உள்ள அஸ்ப்ரி - வெஸ்ட்லைட் பாப்பான் விடுதியில் புதிதாக 29 பேரை கொரோனா தொற்றியது. அவர்களுடன் சேர்த்து அக்குழுமத்தில் இதுவரை 196 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கை தெம்பனிஸ் விடுதியில் 181 ஆகவும், ஜூரோங் பெஞ்சுரு விடுதியில் 54 ஆகவும் 9, டெஃபு சௌத் ஸ்திரீட் 1ல் உள்ள விடுதியில் 263 ஆகவும் உயர்ந்தது.
தங்குவிடுதிகளைப் பொறுத்தமட்டில், கொரோனா பரவல் அங்கு வசிப்போர்க்கிடையே பரவியதாகவும் அவ்விடங்களில் இருந்து வெளியில் பரவியதற்குச் சான்று இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.