தாய்லாந்தில் புதுவகை கொரோனா கிருமி
பேங்காக்: புதிய வகை ‘டெல்டா பிளஸ்’ கொவிட்-19 கிருமியால் தாய்லாந்தில் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது என்று அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஏஒய்.4.2’ என்று அடையாளப்படுத்தப்படும் அந்தப் புதுவகை கிருமி, ஆயுத்தயாவின் பேங் சாய் பகுதியைச் சேர்ந்த 49 வயது ஆடவர் ஒருவரைக் கடந்த மாதம் தொற்றிவிட்டது.
அந்த ஆடவர் கிருமித்தொற்று அபாயமுள்ள பகுதிகளுக்கோ வெளிநாட்டிற்கோ பயணம் செய்யவில்லை.
ஆயினும், அவர் முழுமையாகக் குணமடைந்துவிட்டார் என்றும் ‘டெல்டா பிளஸ்’ கிருமியால் வேறு எவரும் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இப்போதைய பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் காரணமாக விளங்கும் ‘டெல்டா’ கிருமியைக் காட்டிலும், புதிய உருமாற்றமான ‘டெல்டா பிளஸ்’ கிருமி வீரியமிக்கது, அதிகம் பரவக்கூடியது என்று சொல்லப்படுகிறது.