முன்பதிவின்றி மொடர்னா ‘பூஸ்டர்’ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்
கூடுதல் கொவிட்-19 தடுப்பூசி (பூஸ்டர்) போட்டுக்கொள்ள தகுதிபெற்றுள்ளவர்கள், மொடர்னா தடுப்பூசி போடும் எந்த ஒரு தடுப்பூசி மையத்திற்கும் சென்று, அதனைப் போட்டுக்கொள்ளலாம். இதற்கு முன்பதிவு செய்ய தேவையில்லை.
ஃபைசர்-பயோஎன்டெக்/கொமிர்னாட்டி பூஸ்டர் தடுப்பூசிகளைக் காட்டிலும் மொடர்னா பூஸ்டர் தடுப்பூசிகள் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டபின் 30 நிமிடங்களாக இருக்கும் கண்காணிப்பு, காத்திருப்பு நேரம், 15 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.
அதிகம் பரவக்கூடிய ‘ஓமிக்ரான்’ கொரோனா கிருமிக்கு எதிராகக் கூடுதல் பாதுகாப்பை வழங்கவல்லது என்பதால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது முக்கியம் என்றார் கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான ஓங்.
புதிய ஓமிக்ரான் கிருமி, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் செயல்திறனை வேகமாகக் குறைக்கிறது என்பது பிரிட்டனில் நடத்தப்பட்ட அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஃபைசர் தடுப்பூசியின் 2வது தவணையைப் போட்டுக்கொண்ட ஒரு மாதத்திற்குப்பின், ஓமிக்ரான் தொற்றுக்கெதிரான அதன் செயல்திறன் 90 விழுக்காடாக இருந்தது.
ஆனால், மூன்று மாதங்களுக்குப்பின் அது கிட்டத்தட்ட 50 விழுக்காடாகவும் நான்கு மாதங்களுக்குப்பின் 35 விழுக்காடாகவும் குறைந்துவிட்டது என்று அந்த ஆய்வு முடிவுகளைச் சுட்டி, திரு ஓங் விளக்கினார்.
ஆயினும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட இரு வாரங்களுக்குப்பின் ஓமிக்ரானுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் 75 விழுக்காட்டிற்கு உயர்ந்ததையும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.