உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை: மக்களைக் கொல்லும் ஓமிக்ரான்
கொவிட்-19 கிருமியின் மற்ற வகைகளைப் போலவே ஓமிக்ரான் கிருமியால் மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் இறந்துபோகின்றனர் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஓமிக்ரான் வகைக்கிருமியை மிதமானது என்று வகைப்படுத்த முடியாது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரேயேசஸ் கூறினார்.
ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது என்றும் அதனால் மருத்துவமனைகளின் சுமை பெருமளவு கூடியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
டெல்டாவைவிட ஓமிக்ரான் கடுமை குறைந்ததாகக் காணப்படுகிறது. ஆனால் அதற்கென்று அதை மிதமானது என்று வகைப்படுத்த முடியாது என்று திரு டெட்ரோஸ் சொன்னார்.
தற்போதைய தொற்றுப் பரவலை சுனாமி என்று அவர் வருணித்தார்.
கடந்த வாரம் மட்டும் ஏறத்தாழ 9.5 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டன,
இது அதற்கு முந்தைய வாரத்தைவிட 71 விழுக்காடு அதிகமாகும்.
ஆனால் இதுவே குறைவான மதிப்பீடு என்று திரு டெட்ரோஸ் குறிப்பிட்டார்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறைகளால் பல பரிசோதனைகளும் புதிய தொற்றுச் சம்பவங்களும் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம் என்றார் அவர்.
அத்துடன், கொவிட்-19 தடுப்பூசிகளை வளைத்துப் போட்டதாக வசதிபடைத்த நாடுகளை திரு டெட்ரோஸ் சாடினார்.
கொவிட்-19 கிருமி கொண்டுவந்த மரணங்களையும் அழிவையும் நிறுத்த, தடுப்பூசிகள் இன்னும் நியாயமான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள 194 நாடுகளில் 92, 2021க்கான தடுப்பூசி இலக்குகளை எட்டவில்லை.
36 நாடுகள் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டுக்குக் கூட தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை.
2022ன் பாதியில் ஒவ்வொரு நாட்டிலும் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
ஆனால் தற்போதைய நிலையில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த இலக்கை அடைய மாட்டா.
இந்நிலையில் கொவிட்-19 பெருந்தொற்று முடிவதற்குள் வேறு கிருமிவகை தோன்றி பிரச்சினை அளிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.