உலகம் முழுவதும் ஓமிக்ரான் தொற்று அதிகரிப்பதால் புதிய, மேலும் ஆபத்தான திரிபு (variant) உருவெடுப்பதற்கான அபாயம் அதிகரிக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் திரிபு காட்டுத் தீ போல பரவி வந்தாலும், தொடக்கத்தில் அஞ்சியதைவிட அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறைவாக இருப்பதாகத் தெரிகிறது. கொவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வரலாம் என்றும் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்ப முடியும் என்றும் நம்பிக்கையை அது ஏற்படுத்தியுள்ளது.
எனினும், உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அவசரகாலப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்வூட், எச்சரிக்கை கலந்த அறிவுரை கூறினார். வேகமாக அதிகரிக்கும் தொற்று விகிதம், எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
“எந்த அளவுக்கு ஓமிக்ரான் திரிபு பரவுகிறதோ, அந்த அளவுக்குப் புதியதொரு திரிபு உருவெடுப்பதற்கான சாத்தியம் நிலவுகிறது. இப்போது, ஓமிக்ரான் திரிபு மரணத்தை விளைவிக்கக்கூடியது. டெல்டாவைவிட அது குறைந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், அடுத்து வரக்கூடிய திரிபின் மூலம் என்ன காத்திருக்கிறது என்பது யாருக்குத் தெரியும்?” என்று பேட்டி ஒன்றில் டாக்டர் ஸ்மால்வூட் கூறினார்.
பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, ஐரோப்பாவில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட கொவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டின் கடைசி வாரத்தில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்குத் தொற்று உறுதியானது.
“நாம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளோம். மேற்கு ஐரோப்பாவில் தொற்று விகிதம் வேகமாக உயர்கிறது. அதன் முழு தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை,” என்றார் டாக்டர் ஸ்மால்வூட்.