சிங்கப்பூரர்களில் பாதி பேர் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் இந்த ஆண்டு தளர்வில்லை என்று நினைக்கின்றனர்
சிங்கப்பூரில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுவதும் தற்போது உள்ளபடிதான் இருக்கும் என்று இணையம் வழியாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்ட சிங்கப்பூரர்களில் பாதிப் பேர் கருத்துக் கூறினர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஏற்பாட்டில் மிலியூ இன்சைட் எனும் ஆய்வு நிறுவனம் அந்த கருத்தாய்வை நடத்தியது.
ஆய்வில் கலந்துகொண்ட 1,000 பேரில் 54 விழுக்காட்டினர், சிங்கப்பூரில் இவ்வாண்டு கொவிட்-19 சூழலால் கட்டுப்பாடுகள் தற்போதைய நிலையில் வைத்திருக்கப்படும் என்று கருதினர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று 21 விழுக்காட்டினர் கூறினர்.
25 விழுக்காட்டினர் மட்டுமே கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று நம்புவதாகக் கூறினர்.
ஆய்வு செய்யப்பட்டவர்கள் இவ்வாறு கருத்துரைத்தாலும், மருத்துவ நிபுணர்கள் இவ்வாண்டு உள்நாட்டு. அனைத்துலகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கிருமியைக் கட்டுக்குள் வைத்திருக்கத் தான் எலைக் கட்டுப்பாடுகள், பயணங்கள் முன்பும் பின்பும் பரிசோதனைகள் போன்றவை நடப்பில் உள்ளன.
மற்ற நாடுகளில் உள்ள அளவுக்கு சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று பரவும்போது, எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று தொற்றுநோய் நிபுணர் பேராசிரியர் டேல் ஃபிஷர் கூறினார்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் பிரிவில் மூத்த ஆலோசகராக டாக்டர் ஃபிஷர் பணிபுரிகிறார் .
பரவலான சமூகக் கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் பலன் தராது என்றும் சிங்கப்பூர் அக்கட்டத்தை எட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.