'ஓமிக்ரான் பரவலுக்கு வர்த்தகங்கள் தயாராகவேண்டும்'
ஓமிக்ரான் கிருமித் தொற்று மேலும் அதிகமாக பலரை பாதிக்கக் கூடும் என்பதால், வர்த்தகங்கள் அவற்றின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வர்த்தகத் தொடர்ச்சி திட்டங்கள் வகுப்பதுடன், அவை பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றது அமைச்சு
கடந்த ஒரு வாரமாக ஓமிக்ரான் தொற்று எண்ணிக்கை மிக விரைவாகக் கூடியுள்ளதை அடுத்து சுகாதார அமைச்சு முதலாளிகளுக்குஇந்த எச்சரிக்கையை விடுத்தது.
கடந்த புதன்கிழமை ஓமிக்ரான் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 1,185ஐ எட்டியது.
இது செவ்வாய்க்கிழமை பதிவான எண்ணிக்கையைவிட இரட்டிப்பாகும்.
பின்னர் அந்த எண்ணிக்கை நேற்று 1,001க்குக் குறைந்தது.
டெல்டா உருமாறிய கிருமியைக் காட்டிலும் ஓமிக்ரான் வகைக் கிருமி அதிகம் பரவக்கூடியது என்பதால் சிங்கப்பூரில் கிருமித்தொற்று எண்ணிக்கை மேலும் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கலாம் என சுகாதார அமைச்சு கூறியது.
பிற நாடுகளில் ஏற்பட்ட வீசிய ஓமிக்ரான் பரவலால் அலைகளால் வர்த்தக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதை அது சுட்டிக்காட்டியது.
அதனால் வர்த்தகத் தொடர்ச்சி உத்திகளைச் செயல்படுத்தும்படி, குறிப்பாக அத்தியாவசியச் சேவைகளை வழங்கும் வர்த்தகங்களிடம் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியது.
ஊழியர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படும் அபாயத்தைச் சமாளிக்க, அவர்களைக் குழுக்களாகப் பிரித்து வேலை செய்ய வைப்பது உத்திகளில் ஒன்றாகும்.
வீட்டிலிருந்து வேலை செய்வோரில் பாதி பேர் வேலையிடத்திற்குத் திரும்பலாம் என்பது உள்ளிட்ட தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வர்த்தகங்கள் அணுக்கமாக பின்பற்றவேண்டும் என்றும் அமைச்சு கூறியது.
ஜனவரி 15 ஆம் தேதியிலிருந்து முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் தங்களது வேலையிடங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை.
வேலையிடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சமூக ஒன்றுகூடல்களில் பங்கேற்காமல் இருப்பதையும் அவர்களின் சாப்பாட்டு நேரத்தைத் தனித்தனியே எடுத்துக் கொள்வதையும் முதலாளிகள் உறுதி செய்யவேண்டும்.
அதனுடன், வேலையிடங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் அடிக்கடி கிருமிப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
மேலும், உடல்நலம் சரியில்லாதவர்கள் வேலையிடங்களைத் தவிர்த்து மருவத்துவரைக் காணச் செல்லவேண்டும் என்று அது குறிப்பிட்டது.