மருத்துவமனைகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் வருகையாளருக்கு அனுமதி இல்லை
மருத்துவமனை வார்டுகளிலும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் வருகையாளர்கள் அடுத்த நான்கு வாரங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அண்மைய வாரங்களில் ஓமிக்ரான் கிருமிப் பரவல் அதிகரித்துள்ளதே அதற்குக் காரணம்.
இந்த விதிமுறை வரும் திங்கள் முதல் (ஜனவரி 24ஆம் தேதி) பிப்ரவரி 20ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு கட்டமைப்புக்கு சுமை கூடாமல் இருக்கவும் நோய் அபாயம் அதிகமுள்ள முதியோரையும் பாதுகாக்கவும் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சு இன்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
தங்கள் அன்புக்குரியோருடன் நோயாளிகளும் இல்லவாசிகளும் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்ய மருத்துவமனைகளும் பராமரிப்பு இல்லங்களும் காணொளி , தொலைபேசி வழி அழைப்பு போன்ற வசதிகளுக்கு ஏற்பாடு செய்யும்.
ஆயினும் விதிவிலக்கு உண்டு. தேவைப்பட்டால், கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளை அல்லது இல்லவாசிகளைப் பார்க்க, மருத்துவமனை அல்லது பராமரிப்பு இல்லம் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று அமைச்சு கூறியது.
கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுவர்கள், பிள்ளைப் பெறும் தாய்மார் உள்ளிட்டோரைக் காண ஒரு நாளுக்கு ஒருவர் அனுமதிக்கப்படலாம்.
கவலைக்கிடமாக இருப்போரைக் காண ஐந்து பேர் வரை போகலாம்.