நான்காவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் 'குறைவான நன்மையே'
நான்காவது தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதால் வயது குறைந்த உடல்நலமிக்க பெரியவர்களுக்கு மிகக் குறைவான நன்மையே இருக்கக்கூடும் என்று இஸ்ரேலிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
நியூ இங்கிலாந்து மருத்துவ இதழில் ஆய்வு புதன்கிழமை (மார்ச் 16) அன்று வெளியிடப்பட்டது.
டெல் அவிவ் நகரில் உள்ள ஷீபா மருத்துவமனையில் பணியாற்றும் 270 மருத்துவ ஊழியர்கள் ஆய்வில் கலந்துகொண்டனர்.
அவர்கள் மூன்றாவது முறை ஃபைசர் தடுப்பூசி போடப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஃபைசர் அல்லது மொடர்னா தடுப்பூசி நான்காவது தடுப்பூசியாகப் போடப்பட்டது.
நான்காவது தடுப்பூசி அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வு கூறியது.
அத்துடன், மூன்றாவது தடுப்பூசி போடும்போதும் நான்காவது தடுப்பூசி போடும்போதும் உருவாகும் அதே அளவிலான நோய் எதிர்ப்பொருள்களின் அளவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.
மேலும், ஃபைசர் தடுப்பூசியை நான்காவது தடுப்பூசியாகப் போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களைவிட கிருமித்தொற்று அபாயம் 30 விழுக்காடு குறைவாக இருந்தது.
மொடர்னா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மூன்று தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களைவிட கிருமித்தொற்று அபாயம் 18 விழுக்காடு குறைவாக இருந்தது.