தவறுதலாக நான்காவது கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டதை அடுத்து 103 வயது மூதாட்டி உயிர் இழந்த சம்பவத்தைப் பற்றி சுகாதார அமைச்சு விசாரித்து வருகிறது. நடமாடும் தடுப்பூசிக் குழு அவருக்கு அந்தத் தடுப்பூசியைப் போட்டது.
பராமரிப்பு இல்லவாசியான மூதாட்டி டிசம்பர் 16ஆம் தேதி சாங்கி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சலும் உடலின் உப்பு அளவு குறைவாகவும் இருந்தன.
மூன்று நாள்களுக்கு முன்னர்தான் அவருக்கு நான்காவது தடுப்பூசி போடப்பட்டது. மூதாட்டிக்குப் பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாகப் பிறகு தெரிவிக்கப்பட்டது. அவர் ஜனவரி 10ஆம் தேதி மாண்டார். மூதாட்டியின் மரணத்துக்கு நிமோனியா காய்ச்சல்தான் முக்கிய காரணம் என்று பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
கூடுதல் காரணங்களாக பக்கவாதம், இதயநோய் போன்றவை குறிப்பிடப்பட்டன. இவற்றுக்கும் தடுப்பூசி போட்டதற்கும் தொடர்பு உள்ளதா என்று மரண விசாரணை அதிகாரி இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஆனால் இவை முதியவர்களுக்கு பொதுவாக ஏற்படும் இயற்கையான நோய்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து அமைச்சு நேற்று அறிக்கை விடுத்தது. அந்தச் சம்பவத்தைக் கடுமையாகக் கருத்தில் கொள்வதாகவும் அதுபற்றி முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சு கூறியது. அந்த விசாரணை இம்மாதம் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தடுப்பூசி நடைமுறைகளில் ஏற்பட்ட முறைகேட்டாலும், பராமரிப்பு இல்லத்துக்கும் தடுப்பூசியைக் கையாண்ட மருந்தகத்துக்கும் இடையில் முறையான தொடர்பு இல்லாததாலும் தடுப்பூசி தவறுதலாகப் போடப்பட்டது என்று எங்கள் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று அமைச்சு குறிப்பிட்டது.
இக்கான் ஹெல்த்கேர் நிறுவனம் நடத்தும் சாய் சீ பராமரிப்பு இல்லத்தில் அந்த மூதாட்டி வசித்து வந்தார்.
பான்கேர் மருந்தகத்தின் குழு மூதாட்டிக்குத் தடுப்பூசி போட்டது. நல்லெண்ண அடிப்படையில், மூதாட்டியின் மருத்துவமனைக் கட்டணத்தை இரண்டு அமைப்புகளும் கூட்டாகச் செலுத்தின என்று அமைச்சு தெரிவித்தது.
நடமாடும் தடுப்பூசிக் குழு ஒன்று, ஒருவரைத் தவறாக அடையாளம் கண்டு, தவறுதலாக அவருக்கு தடுப்பூசி போட்ட முதல் சம்பவம் இது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் இதுவரை சுமார் 152,000 தடுப்பூசிகளைச் செலுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தைப் பற்றி டிசம்பர் மாதமே தெரிவிக்கத் திட்டமிட்டதாக சுகாதார அமைச்சு கூறியது. ஆனால் அந்த மூதாட்டியின் அடையாளத்தை தெரிவிக்கும் தகவல்களை வெளியிட வேண்டாம் என்று அவரது குடும்பம் அமைச்சைக் கேட்டுக்கொண்டது.
அவரது குடும்பத்தை மீண்டும் தொடர்புகொண்ட பின்னர், சம்பவத்தைப் பற்றி தெளிவுபடுத்த இந்த தகவல்களை வெளியிடுவதாக அமைச்சு தெரிவித்தது.