கொவிட்-19 கிருமி மீண்டும் தொற்றினால் நோய் கடுமையாகும் அபாயம் அதிகம்
கொவிட்-19 கிருமி முதல்முறையாகத் தொற்றியதைவிட இரண்டாவது முறை தொற்றும்போது, மரணம், மருத்துவமனையில் அனுமதி, கடுமையான நோய் பாதிப்பு ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கிறது.
கொவிட்-19 மீண்டும் தொற்றும்போது தீவிர நோய் பாதிப்பும் நீண்டகாலத்துக்குத் தொடரும் கொரோனா பாதிப்பும் தொடர்வதாக ஆய்வு ஒன்று தெரிவித்தது.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் போட்டுக்கொண்டாலும் கூடுதல் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிட்டாலும் இந்த பாதிப்பு காணப்பட்டது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் அந்த ஆய்வை மேற்கொண்டனர்.
கடந்த 2020 முதல் 2022 வரை கிருமி தொற்றிய அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரின் தரவுகள் ஆராயப்பட்டன.
கொவிட்-19 மீண்டும் தொற்றாதவர்களைவிட தொற்றியவர்கள் மரணம் அடையும் அபாயம் இரு மடங்கு அதிகரித்தது.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் மும்மடங்கானது.
நுரையீரல், இதயம், சிறுநீரகம், மனநலம், எலும்பு, தசைகள் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் கூடியது.
கொவிட்-19 கிருமி தொற்றியவர்கள் தங்களுக்கு ஒன்றும் ஆகாது என்ற எண்ணத்தில் இருப்பதைக் கவனித்து வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் கிருமி மீண்டும் தொற்றினால் விளைவுகள் உண்டு என்றும் ஆண்டிறுதி விடுமுறைக் காலம் தொடங்குவதால் தொடர்ந்து முன்னெச்செரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.