தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக கணைய மாற்று அறுவை சிகிச்சையை சிங்கப்பூர் வழங்கவுள்ளது.
தற்போதைக்கு தென்கிழக்காசிய வட்டாரத்தில் அச்சேவையை வழங்கும் ஒரே நாடு இது.
சிங்கப்பூரில் கணைய மாற்று அறுவை சிகிச்சையைச் சுகாதார அமைச்சு அங்கீகரித்து உள்ளது.
அதையடுத்து அது தேசிய செயல்திட்டமாக ஆகி இருக்கிறது.
கணைய மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ள விரும்புவோர் இப்போது தேசிய காத்திருப்போர் பட்டியலில் இடம்பெறலாம்.
புதிய தேசிய செயல்திட்டத்தின் கீழ், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் மானியமும் உண்டு.
உடலில் சேரும் சர்க்கரை அளவை இன்சுலின் என்ற நிறமற்ற திரவம் கட்டுப்படுத்துகிறது.
கணையம்தான் இன்சுலினைச் சுரக்கும். கணையம் கெட்டுவிட்டால் ஒருவருக்கு கடுமையான நீரிழிவு நோய் ஏற்படும்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையும் 2012ல் கணைய மாற்று அறுவைசிகிச்சையை முன்னோடித் திட்ட அடிப்படையில் தொடங்கின.
இந்தத் திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள் விரும்பினால் ஏக காலத்தில் கணையம், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைகளைச் செய்துகொள்ளலாம்.