குருகிராம்: இந்தியாவின் குருகிராம் நகரில் தளம் கொண்டுள்ள ‘கோடிங் நிஞ்சாஸ்’ எனும் கல்வித் தொழில்நுட்ப நிறுவனம் தன் ஊழியர்களை அலுவலகத்தினுள்ளேயே வைத்துப் பூட்டியதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘கோடிங் நிஞ்சாஸ்’ நிறுவன அலுவலகத்தில் நிகழ்ந்த அந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. அதில் பாதுகாவல் அதிகாரி ஒருவர் அலுவலகத்தின் கதவைப் பூட்டுவதைக் காண முடிந்தது.
அந்நிறுவன ஊழியரான ரவி ஹண்டா என்பவர், முதன்முதலில் அந்தக் காணொளியைப் பகிர்ந்துகொண்டார்.
அலுவலகத்தின் கதவைப் பூட்டுமாறும் தனது அனுமதியின்றி ஊழியர்களை அலுவலகத்திற்கு வெளியே அனுப்பக்கூடாது என்றும் நிறுவன மேலாளர் ஒருவர் தமக்கு உத்தரவு விடுத்ததாக அந்தப் பாதுகாவல் அதிகாரி தெரிவித்தார்.
இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட நிறுவனம், அது தனிப்பட்ட ஒரு சம்பவம் என்றும் குறிப்பிட்ட சில ஊழியர்கள்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டுவிட்டர் மூலமாக விளக்கியது.
தன் ஊழியர்களில் ஒருவர் அந்த வருத்தத்திற்குரிய செயலைச் செய்ததாக நிறுவனம் குறிப்பிட்டது. சில நிமிடங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த ஊழியர் தமது தவற்றை ஒப்புக்கொண்டு அசௌகரியத்திற்கு மன்னிப்பு கேட்டதாகவும் நிறுவனம் கூறியது.