சென்னை: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என தெரிய வந்துள் ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஓர் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அண்மையில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். கலப்படப் பாலை அருந்துவோரின் உயிருக்கே ஆபத்து விளைவ தாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் ஆனது. அது தொடர்பான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மாநிலத்தில் கலப்படப்பால் விற்பனையைத் தடுக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யு மாறும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், கலப்படப் பால் விவகாரம் தொடர்பாக அரசு மேற்கொண் டுள்ள நடவடிக்கைகளை அவர் விவரித்துள்ளார்.
"தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு தொடங்கி 2017 ஆண்டு வரை, ஆவின் பால் உட்பட மொத்தமாக 886 பால் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள் ளன. அவற்றில் 187 பால் மாதிரி கள் தரம் குறைந்தவை என்பது சோதனைகள் மூலம் உறுதியாகி உள்ளது," என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பால் தவிர பால் பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ள அரசு, அவற்றுள் 57 பொருட்களின் தரம் குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட மாதிரிகள் எந்தப் பகுதியில் இருந்து தருவிக்கப்பட்டவை என்பது குறித்த தகவல்களும் அரசின் அறிக்கையில் விவரமாக குறிப்பிடப் பட்டுள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் மீது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக தெரிவித்த குற்றச் சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது செயல்பாட்டை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்திருந்தனர். தனியார் நிறுவனங்களை மறைமுகமாக மிரட்டி அமைச்சர் ஆதாயமடைய பார்ப்பதாகவும் எதிர்க் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.