இந்தியாவுக்கு 'சிறப்பு வர்த்தக நாடு' என்ற தகுதியை நீக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டமிடுகிறார். தீர்வையில்லாமல் 5.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஏற்றுமதிகளின் நுழைவை இதுவரை அனுமதித்திருந்த அமெரிக்கா, இனி அதனை ரத்து செய்யும் என்று கூறியுள்ளது. இதுபோலவே 'சிறப்பு வர்த்தக நாடு' என்று அறிவிக்கப்பட்டிருந்த துருக்கிக்கும் இந்த அங்கீகாரம் நீக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
வர்த்தகப் போருக்கு ஒரு முடிவு கட்ட அமெரிக்காவும் சீனாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் வேளையில் இந்த முடிவு வெளிவந்துள்ளது. மற்ற நாடுகளுடன் நிலவும் வர்த்தக உறவின் சரிசமமின்மையைத் தீர்க்க இத்தகைய முடிவுகளை எடுப்பத்தில் திரு டிரம்ப்பின் நிர்வாகம் மும்முரம் காட்டி வருகிறது.
வளர்ந்துவரும் பொருளியல்களுக்குக் கைகொடுக்கும் 'ஜிஎஸ்பி' என்ற திட்டத்திலிருந்து இந்தியாவையும் துருக்கியையும் நீக்க அமெரிக்கா திட்டமிடுவதாக அமெரிக்க வர்த்தகத்துறை அலுவலகம் திங்கட்கிழமை (மார்ச் 5) தெரிவித்தது. ஜிஎஸ்பி திட்டத்தால் பயன்பெறும் ஆகப் பெரிய நாடாக இந்தியா உள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க சூளுரைத்திருந்த திரு டிரம்ப், அதிக அளவு வர்த்தக வரிகளை விதித்திருக்கும் இந்தியாவைக் குறைகூறியுள்ளார். "இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் அமெரிக்காவுக்குத் தேவைப்படும் உறுதியை இந்தியா அளிக்கவில்லை. இந்தியச் சந்தைகளைச் சென்றடைய அமெரிக்க வர்த்தகங்களுக்கு நியாயமான சூழலை அந்நாடு அனுமதிக்கவில்லை," என்று திரு டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.