கர்நாடகாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுப்போனாலும் தாம் இப்போது ஆக மகிழ்ச்சியான மனிதராக இருப்பதாகப் பதவியிலிருந்து வெளியேறப்போகும் ஹெச்.டி குமாரசாமி தெரிவித்திருக்கிறார்.
ஓராண்டுக்கு மேலாக கர்நாடக மக்களுக்குச் சேவையாற்றிய பேறு தமக்கு மனநிறைவை அளித்திருப்பதாகத் திரு குமாரசாமி கூறினார். “இத்தருணத்தில் நான் ஆக மகிழ்ச்சியான மனிதர். கடந்த 14 மாதங்களாக மக்களுக்காக நான் கொடுத்துள்ள உழைப்பே இதற்குக் காரணம். பல வகையான இடையூறுகளுக்கு மத்தியில் நேர்மையாக உழைத்த நான், சந்தோஷத்துடன் என் அலுவலைத் துறக்கிறேன்,” என்றார் அவர்.
காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணியிலிருந்து 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியது, இரண்டு சுயேச்சை உறுப்பினர்கள் பாஜகவுக்கு மாறியது ஆகியவற்றால் மாநில அரசின் ஆளுங்கட்சி, தனது பெரும்பான்மையை இழந்து பின்னர் கவிழ்ந்தது. இதன் தொடர்பில் அரசியல் சதி நடந்திருப்பதாக காங்கிராஸ் கட்சி ஆதரவாளர்களும் பாஜக எதிர்ப்பாளர்களும் கூறி வருகின்றனர்.
திரு குமாரசாமிக்கு அடுத்தபடியாக பாஜகவின் மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடகாவின் அமைச்சராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியைவிட்டு விலகியவர்கள் மீது தமக்கு எந்த அக்கறையும் இல்லை என்றார் திரு குமாரசாமி. சொந்தக் கட்சியை வளர்ப்பதில்தான் இப்போது தமது கவனம் இருப்பதாக அவர் கூறுகிறார்.