புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாதபடி கொரோனா கிருமித்தொற்றில் முதன்முதலாக மும்பையை டெல்லி விஞ்சி இருக்கிறது. புதுடெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வியாழனன்று புதிதாக 1,513 பேரைக் கிருமி தொற்றியது. மும்பையில் இந்த அளவு 1,276 பேராக இருந்தது.
புதுடெல்லியில் கடந்த ஒரு வார காலமாகவே கிருமித்தொற்று மிக அதிகமாகக் கூடி வருகிறது. இதுவரையில் அங்கு 23,645 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் 9,500 பேருக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து இருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு முன் நிலவரம் வேறு மாதிரியாக இருந்தது. டெல்லியில் நாள் ஒன்றுக்குக் கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 500 முதல் 800 பேராக இருந்தது.
அதேவேளையில், மும்பையில் இந்த எண்ணிக்கை 1,200 பேருக்கும் அதிகமாக இருந்து வந்தது.
ஆனால் கடந்த சில நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மும்பையில் தொற்று குறைந்து வரும் வேளையில், டெல்லியில் கூடிவருகிறது. இந்தியாவிலேயே அதிகம் பாதிப்புள்ள ஐந்து மாநிலங்களில் கிருமித்தொற்று மிக வேகமாக பரவி வரும் நகராக புதுடெல்லி இருக்கிறது.
ஆகையால் நகருக்கு வரும் யாரும் அவர்கள் எந்த வழியில் வந்தாலும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு வீட்டிலேயே தனித்து இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஹரியானாவுடன் கூடிய எல்லையை மூடிவிட வேண்டும் என்றும் புதுடெல்லி முடிவு செய்துவிட்டது. புதுடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ராஜ்குமார் ஆனந்துக்கும் அவருடைய சகோதரருக்கும் கிருமி தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அந்த இருவரும் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் நேற்றுக் குறிப்பிட்டன.
இதேபோல, மே 1ஆம் தேதி இந்தக் கட்சியின் விசேஷ் ரவி என்ற எம்எல்ஏவுக்கும் அவருடைய சகோதரருக்கும் கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது.
இவ்வேளையில், புதுடெல்லியில் இருக்கும் எல்லா கொவிட்-19 மருத்துவமனைகளும் நோயாளிகளைக் கையாளும்போது பின்பற்ற வேண்டிய ஒரே மாதிரியான வழிகாட்டி நெறிமுறைகளை டெல்லி அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
இந்நிலையில், மும்பை, சென்னையைப் போன்ற பெரு நகரம் என்றாலும் 1.2 கோடி மக்கள் வசிக்கும் பெங்களூருவில் கிருமித்தொற்று மிகமிகக் குறைவாக இருக்கிறது. அங்கு வெறும் 385 பேருக்குத்தான் கிருமி தொற்றி இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.