வயநாடு: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்துக்கு உட்பட்ட வலாடு கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பத் தினரின் உறவினர் ஒருவர் அண்மையில் கொரோனாவால் உயிரிழந்தார். கோழிக்கோடு சென்று அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு திரும்பிய அந்தக் குடும்பத்தாரை சோதித்தபோது ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதேபோல அங்குள்ள மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அங்கிருந்து திரும்பிய அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் மூலம் வலாடு கிராமத்தில் கிருமித்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு வரை அங்கு 169 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 30 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் வலாடு கிராமத்தில் 199 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்தக் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு இரவு பகலாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.