புதுடெல்லி: இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் எல்லையில் மீண்டும் அத்துமீறி உள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
ஆகஸ்ட் 29 நள்ளிரவில் இந்த அத்துமீறல் நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
அச்சமயம் ஏற்கெனவே உள்ள நிலையை மாற்றுவதற்கான முயற்சிகளில் சீன ராணுவம் ஈடுபட்டதாக மத்திய அரசு சாடியுள்ளது.
அண்மைய சில மாதங்களாக இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக லடாக் எல்லைப் பகுதியில் இருதரப்பும் கடந்த ஜூன் மாதம் மோதிக் கொண்டன.
அப்போது இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனத்தரப்புக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
போர் பதற்றம் அதிகரித்த நிலையில் இருதரப்பும் எல்லையில் படைகளைக் குவித்தன. பின்னர் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளை அடுத்து படைகளை விலக்கிக் கொள்வது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் சீன ராணுவம் எல்லையில் கட்டுமான நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் 29ஆம் தேதி நள்ளிரவில் சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் வகையில் இருந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரியின் தெற்குக் கரையில் சீன ராணுவத்தின் அத்துமீறலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இந்தியத் தரப்பு தனது நிலைகளை வலுப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போது எழுந்துள்ள புதுப் பிரச்சினை குறித்து ராணுவத் தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியை நிலைநாட்ட இந்திய ராணுவம் உறுதி கொண்டுள்ளதாகவும் அதேசமயம் தனது எல்லைக்குட்பட்ட பகுதியைக் காப்பதில் இந்திய ராணுவம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லையில் நேற்று காலை பிரிகேட் கமாண்டர் மட்டத்திலான கொடி சந்திப்பு நிகழ்வு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தியக் கடற்படைக்கு ஆறு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மொத்தம் 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ள இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
சீனக் கடற்படையிடம் தற்போது 50க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் 350 போர்க்கப்பல்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியக் கடற்படையிடம் 15 மரபு சார்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களும் 2 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் உள்ளன.
எனவே, சீனாவுடன் ஒப்பிடுகையில் நிலவும் இடைவெளியை ஈடுகட்ட ஆறு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.