புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவது உட்பட கொவிட்-19க்கான புத்தாக்கத் தீர்வுகளைக் காண்பதற்காக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களைக் கொண்ட 11 குழுக்கள் விரைவில் பணிகளைத் தொடங்க உள்ளன.
தொற்றை விரைவில் கண்டுபிடிக்கும் சோதனை முறை, கிருமிக்கு எதிரான சிகிச்சை, மாற்று மருந்துகள், செயற்கை சுவாசக் கருவி ஆய்வு, கிருமிநாசினி இயந்திரங்கள், உணர் கருவிகள் பொருத்தப்பட்ட அறிகுறி கண்டறியும் சாதனங்கள் போன்ற கொவிட்-19 தொடர்பான ஆய்வுகளை அவை மேற்கொள்ளும் என இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளை நிதியின் (USISTEF) ஆதரவுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இணைந்து இந்த நிதியை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 சவாலை எதிர்கொள்ளும் வகையில் புதுமையான யோசனைகளை முன்வைக்கும் 11 இருதரப்பு குழுக்களுக்கு USISTEF விருதுகள் வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான புத்தாக்க வரைவுகளை தொழில் முனைவர்கள் சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்து உள்ளது.