கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது பள்ளிகளும் மூடப்பட்டன.
பின்னர், தொலைக்காட்சி, இணையம் வழியாக பாடம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், பலரிடம் கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, கணினி போன்றவை இல்லாத நிலையில் அவர்களால் இணையம் வழி கல்வியில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா, துமார்த்தர் கிராமத்தையே வகுப்பறையாக்கி திண்ணைகளில் மாணவர்களை போதிய அளவுக்கு இடைவெளியில் அமரவைத்து, சுவர்களை கரும்பலகையாக்கி தெருக்களிலேயே பாடம் நடத்தி வருகின்றனர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்.
மாணவர்களின் நேரம் விரயமாவதில்லை என்பதுடன் பெற்றோருக்கும் நிம்மதி.
சுமார் 100 கரும்பலகைகளை ஆசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த முயற்சியை தும்கா துணை ஆணையர் ராஜேஷ்வர் பாராட்டியுள்ளார். மற்ற பள்ளி ஆசிரியர்களும் இதனைப் பின்பற்ற பரிந்துரைத்துள்ளார் அவர்.