கேரள மாநிலம் கொச்சியில் வீட்டு வேலைக்குச் சென்ற 55 வயது பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டின் சேலத்தைச் சேர்ந்த அந்தப் பெண், கொச்சி மெரின் டிரைவ்வுக்கு அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வழக்கறிஞரான இம்தியாஸ் அகமது என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 28ஆம் தேதி பணிப்பெண் வேலைக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில், இம்மாதம் 5ஆம் தேதி, அந்தப் பணிப்பெண் ஆறாவது மாடியின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து விட்டதாக, பணிப்பெண்ணின் கணவருக்கு தொலைபேசி வழி தெரிவிக்கப்பட்டது.
முதலில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பணிப்பெண், பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது குடும்பத்தார் கேரளாவுக்குச் சென்ற பிறகுதான், வேலைக்குச் சேர்ந்த இடத்தில் அந்தப் பணிப்பெண்ணை வீட்டில் அடைத்து வைத்ததும், கொடுமைப்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.
அந்த வீட்டிலிருந்து தப்பிப்பதற்காக கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து இரண்டு சேலைகளை கட்டி இறங்கும்போது அவர் கீழே தவறி விழுந்த தகவலும் வெளியானது.
இறந்துபோன பணிப்பெண்ணின் கணவருக்கு பார்வைத்திறன் இல்லை என்பதும் அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வேலைக்குச் சேர்ந்த 2 தினங்களிலேயே வேலை மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தாம் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் அந்த பணிப்பெண் தம் கணவரிடம் தொலைபேசி வழி தெரிவித்ததாக ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பணிப்பெண் வீட்டிலிருந்து வெளியேறிவிடாதபடி வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து போலிசில் புகார் அளிக்க வேண்டாம் என வழக்கறிஞர் இம்தியாஸ் மிரட்டியதாகவும் பணம் கொடுப்பதாக அவர் ஆசை வார்த்தை கூறியதாகவும் பணிப்பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். மேலும் தமது கட்டைவிரல் ரேகையை வலுக்கட்டாயமாக அவர் வாங்கிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞர் இம்தியாஸ் மீது பிரிவுகள் 342, 338 மற்றும் 370 ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து இம்தியாஸிடம் கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு முன்பே, அந்த வீட்டின் உரிமையாளர் 14 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தி, சிறுமியிடம் கொடூரமாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் போலிஸ் விசாரணை தொடர்கிறது.