பெங்களூரு: கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கணவருக்குச் சிகிச்சையளிக்க பத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை நாடியும் படுக்கை காலியாக இல்லாததால் வேதனையடைந்த மனைவி விரக்தியில் மாநில முதல்வர் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் உடனடியாக அவசர மருத்துவ ஊர்திக்கு ஏற்பாடு செய்தனர். ஆயினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அந்த ஆடவர் உயிரிழந்துவிட்டார்.
இன்னொரு சம்பவத்தில், கொரோனா நோயாளி ஒருவரின் குடும்பத்தினர் பெங்களூரில் கர்நாடக சட்டமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். தம் தாயாரின் நிலை மிகவும் மோசம் அடைந்து வருவதாகவும் ஆனாலும் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் திண்டாடி வருவதாகவும் அவரின் மகள் சொன்னார். இதைத் தொடர்ந்து, மாநில அரசின் செயலாளர் தலையிட்டு, மருத்துவமனையில் படுக்கைக்கு எற்பாடு செய்தார்.
கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் புதிதாக 49,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது; மேலும் 328 பேர் இறந்துவிட்டனர்.
இதனிடையே, கொரோனா பரவல் மோசமடைந்து வருவதால், மாநிலத்தில் முடக்கநிலையை அறிவிப்பதைத் தவிர்க்க முடியாமல் போகலாம் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்து இருக்கிறார்.