புதுடெல்லி: அனைத்துலக மோசடிக் கும்பலைச் சேர்ந்த இருவரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
இணையம் வழியாக முதலீடு செய்யும்படி ஆசை காட்டிய அக்கும்பல், ரூ.25 கோடிக்கு மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் அரியானாவைச் சேர்ந்த நாகராஜு கர்மாஞ்சி, 31, தெலுங்கானாவைச் சேர்ந்த கொண்டலா சுபாஷ், 31, என அடையாளம் காணப்பட்டனர்.
அக்கும்பல் பயன்படுத்தி வரும் பல இந்திய 'சிம்' அட்டைகள் சீனாவில் செயல்பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறைந்தது பத்து நிறுவனங்களை கர்மாஞ்சி உருவாக்கியதும் அவற்றின் வங்கிக் கணக்குகளைச் சீன நாட்டவர்கள் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கர்மாஞ்சி, சுபாஷ் வசம் இருந்து 30 கைபேசிகள், ஏழு மடிக் கணினிகள், 50 'சிம்' அட்டைகள், ஆறு கடன் அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.