புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய தூதரக ஊழியர்கள் கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தாயகம் திரும்பியுள்ளனர். இரவோடு இரவாக அவர்களை இந்திய அரசு மீட்டது.
எந்த நேரத்திலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அஞ்சிய நிலையில், விமான நிலையம் செல்லும் வரை உயிர் பயத்தில் தவித்ததாக தூதரக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்த நிலையில், தூதரக ஊழியர்களையும் அவர்தம் குடும்பத்தாரையும் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழையும் முன்பே ஐம்பதுக்கும் மேற்பட்டோர் விமானப்படை விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
மேலும் இருநூறு பேரை அழைத்து வர மற்றொரு விமானம் காபூல் விமான நிலையத்தில் காத்திருந்தது. எனினும் இடைப்பட்ட நேரத்தில் காபூலும் தலிபான்கள் வசமானது.
இதனால் இந்திய தூதரகத்தில் இருந்து வெளியேற யாரும் அனுமதிக்கப்படவில்லை. தூதரகத்தைச் சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் நிறுத்தப்பட்டனர்.
இதனால் தலிபான்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தக் கோரிக்கையை தலிபான்கள் ஏற்றுக்கொண்டனர்.
தூதரகத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்கள், ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த விமான நிலையத்துக்கு பாதுகாப்புடன் செல்ல அனுமதிக்கப்பட்டது.
எனினும், எந்நேரமும் தாக்குதல் நடக்கக்கூடும் என்று அஞ்சியதாகக் குறிப்பிட்டுள்ள தூதரக ஊழியர்கள், ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து விமான நிலையம் சென்றடைய ஐந்து மணிநேரமானது என்றும் அதுவரை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர்.
"தலிபான்கள், இந்திய அரசு ஆகிய இருதரப்புக்கும் இடையே காலை முதல் மாலை இருள் சூழும் வரை பேச்சுவார்த்தை நீடித்தது. இரவு நெருங்கும்போதுதான் உடன்பாடு ஏற்பட்டது.
"அதன் பிறகு ஐந்து மணி நேர பயணத்துக்குப் பின்னர் இந்தியர்கள் விமான நிலையம் சென்றடைந்தனர்.
பின்னர் இரவோடு இரவாக அவர்கள் விமானப்படை விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்பட்டனர்," என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு உணவு, மருந்து பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.3,800 கோடியாகும்.
தடை விதிக்கப்பட்டதால் இனி, தேயிலை, காபி, மசாலா பொருள்கள், தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவற்றை இந்திய வர்த்தகர்களால் ஏற்றுமதி செய்ய இயலாது.