புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் 329 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்.
காபூல் விமான நிலையம் இப்போது அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதையடுத்து அமெரிக்கத் தரப்புடன் இந்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து, காபூல் விமான நிலையத்தில் இருந்து தினமும் இரண்டு விமானங்களை இந்தியா இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காபூலில் மட்டும் தற்போது 1,200க்கும் மேற்பட்ட இந்திய குடிமக்கள் நாடு திரும்ப காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் காபூலில் இருந்து இரண்டு நேப்பாள குடிமக்கள் உட்பட 329 பேர் மூன்று விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது பல்வேறு மாநில அரசுகளும் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அசாம் மாநிலத்தில் இது தொடர்பாக 14 பேர் கைதாகினர். பெங்களூருவில் ஆடவர் ஒருவர் கைதானதாக கர்நாடகா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நிலவரத்துடன் காஷ்மீர் விவகாரத்தை ஒப்பிட்டு, முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ள கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
அண்டை நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை கவனிக்கும் இந்திய அரசு, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஜம்மு, காஷ்மீர் விவகாரத்தை சரி செய்ய வேண்டும் என மெகபூபா முஃப்தி கூறியதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்திய அரசு சட்டவிரோதமாக, அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக ஜம்மு காஷ்மீரின் அடையாளத்தைப் பறித்துக்கொண்டது. இந்த தவற்றைத் திருத்திக் கொள்ள இன்னும் வாய்ப்பு உள்ளது," என மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. வெறுப்பு அரசியலில் ஈடுபடும் மெகபூபா முஃப்தி போன்றவர்கள் மீதும் இந்தியாவுக்கு எதிராக சதி செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி வலியுறுத்தி உள்ளது.