பரிசோதனை முடிவுக்காக ஒரு நாளுக்கும் மேல் காத்திருக்கும் பயணிகள்
புதுடெல்லி: பல்வேறு நாடுகளில் இருந்து நாடு திரும்பும் பயணிகளால் டெல்லியில் உள்ள அனைத்துலக விமான நிலையம் இப்போது ரயில் நிலையம்போல் காட்சியளிப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொற்று அபாயமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்தப் பரிசோதனை முடிவு கிடைக்க பல மணி நேரம் ஆகிறது என்றும் இதன் காரணமாகவே விமான நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருக்க நேரிடுவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரு தினங்களாக சில பயணிகள் 24 மணி நேரத்தையும் கடந்து விமான நிலையத்திலேயே காத்திருப்பதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, உடனடியாகக் களமிறங்கி, பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் களைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து பயணிகள் குடிநுழைவுச் சோதனைகள் தொடர்பில் எட்டு வகையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அன்றாட விமானப் போக்குவரத்தும் நெருக்கடி இன்றி நடைபெற தனது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அனைத்து விமான நிலையங்களும் தற்போது மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாகவும் அன்றாட சூழ்நிலைக்கு ஏற்ப சில ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மேலும் கூறியுள்ளார்.
புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு இப்போது இந்தியாவையும் எட்டிஉள்ளது. இதனால் தொற்றுப் பாதிப்பு பரவாமல் கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே கொரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதன் காரணமாகவும் மத்திய சுகாதார அமைச்சின் வழிகாட்டும் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாலும், விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் பயணிகளை வரவேற்க வந்த உறவினர்கள் நண்பர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. தொற்றுக்குப் பயந்து அவர்களில் பலர் விமான நிலையத்துக்கு வெளியே சாலையோரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நோயாளிகளை பொதுவான கொரோனா வார்டில் அனுமதிக்கக் கூடாது என்றும் ஓமிக்ரான் நோயாளிகளுக்கு என முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சு அனைத்து மாநில தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
கர்நாடகாவில் ஓமிக்ரான் பாதிப்புள்ள பயணிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதற்கான இரண்டு மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பெங்களூரிலும் மற்றொன்று மங்களூரிலும் உள்ளன. கர்நாடக மாநிலத்தில் அவ்விரு நகரங்களிலும்தான் அனைத்துலக விமான நிலையங்கள் உள்ளன.
நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 9,419 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மேலும், 159 பேர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் நோயாளி குணமடைந்துள்ளார்.