இந்தியா, ஐந்து நாள் வேலையிலிருந்து நான்கு நாள் வேலை செய்யும் முறைக்கு அடுத்த ஆண்டு மாறக்கூடும்.
அத்துடன், ஊழியர்களின் சேமநிதியிலும் அவர்கள் கையில் பெறும் சம்பளத்திலும் மாற்றங்கள் நிகழக்கூடும்.
அடுத்த நிதி ஆண்டில் சம்பளங்கள், சேமநிதி, தொழிற்முறை உறவுகள், வேலையிடப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக புது புதிய தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவது பற்றி இந்திய தொழிலாளர் அமைச்சு பரிசீலித்து வருகிறது.
மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் இவ்வாறு தெரிவித்ததாக இந்தியாவின் பிடிஐ நிறுவனம், கூறியது.
அந்தப் புதிய சட்டங்களின்கீழ், பணிநாள்கள், பணிநேரம், ஊழியர்கள் கையில் பெறும் சம்பளம் போன்றவை மாறக்கூடும்.
எடுத்துக்காட்டாக, தற்போதைய ஐந்து நாள்களுக்குப் பதிலாக ஊழியர்கள் நான்கு நாள்களுக்கு மட்டும் வேலை செய்யும் வகையில் சட்டம் மாற்றப்படலாம்.
ஆனால் அன்றாட வேலை நேரம், 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்கு உயரலாம்.
வாரத்துக்கு 48 மணி நேரம் என்னும் வாராந்திர வேலை நடைமுறையைக் குறைக்க இந்திய அரசாங்கம் விரும்பவில்லை என்று அந்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
மேலும், நிறுவனங்களும் ஊழியர்களும் செலுத்தும் சேமநிதித் தொகையை உயர்த்துவது பற்றி இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதன்வழி, சேமநிதி உயரும் அதே நேரத்தில் ஊழியர்கள் கையில் பெறும் சம்பளம் குறையக்கூடும்.