காவல்துறை தீவிர கண்காணிப்பு: பாதுகாப்புப் பணியில் 3,000 போலிசார்
புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, மும்பை மாநகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூவாயிரத்துக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தாண்டையொட்டி பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடும்போது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், காலிஸ்தான் தீவிரவாதிகளின் அடுத்த இலக்காக மும்பை மாநகரம் இருக்கக்கூடும் என உளவுத்துறை கூறியுள்ளது.
இதையடுத்து மும்பை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பிலும் சுற்றுக்காவல் பணியிலும் ஈடுபட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், விடுப்பில் உள்ள காவலர்கள் அனைவரும் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மும்பை முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூட வாய்ப்பு உள்ளதாக மாநகர காவல் ஆணையர் கைசர் காலிட் கூறியுள்ளார்.
இந்தக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
"இது தொடர்பாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
"மும்பையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்று ஆணையர் கைசர் காலிட் மேலும் தெரிவித்தார்.
காஷ்மீரில் கடந்த இரு தினங்களில் மட்டும் ஒன்பது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரு வெவ்வேறு இடங்களில் இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில் அனந்த்நாக் பகுதியில் ஆறு பயங்கரவாதிகளும் ஸ்ரீநகரில் மூன்று பேரும் பலியாகிவிட்டனர். பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் வீர மரணம் அடைந்தார்.