ஹைதராபாத்: இந்தியாவைச் சேர்ந்த 19 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள், கொவிட்-19 சிகிச்சையில் பயன்படக்கூடிய நிர்மாட்ரெல்விர் எனும் மருந்தைத் தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளன.
ஃபைசர் நிறுவனத்தின் இந்த மருந்து, நோயாளிகள் வாய்வழியே உட்கொள்ளக்கூடியது.
ரிடோனவிர் மருந்துடன் சேர்த்து கொவிட்-19 நோயைக் குணப்படுத்த இதனைப் பயன்படுத்தவேண்டும்.
நிர்மாட்ரெல்விர் மருந்தைத் தயாரிப்பதற்கு உலகின் 12 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 35 மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் துணை உரிமத்திற்குக் கையெழுத்திட்டுள்ளன.
இந்தியாவின் 19 நிறுவனங்களையும் உள்ளடக்கிய அவை, ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுள்ள மருந்துக் காப்புரிமைக் குழுவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
தயாரிக்கப்படும் மருந்துகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 95 நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
35 நிறுவனங்களில் ஆறு, மருந்துக்கான மூலப்பொருள் தயாரிப்பில் ஈடுபடும்; ஒன்பது நிறுவனங்கள் மருந்தைத் தயாரிக்கும்.
எஞ்சிய 20 நிறுவனங்கள் இருவகைச் செயல்பாடுகளிலும் ஈடுபடும்.
இதற்கிடையே, இந்தியாவில் அன்றாட கொவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
புதிதாக 2,528 பேருக்கு பாதிப்பு உறுதியானதாக நேற்று மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களையும் சேர்த்து நாட்டில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4.30 கோடியைத் தாண்டியது.
இவ்வேளையில், உலகின் மற்ற நாடுகளை விட ஓமிக்ரான் ரகக் கொவிட்-19 கிருமிப் பரவலை இந்தியா சிறப்பாக கையாண்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஓமிக்ரான் ரகக் கிருமிப் பரவல் உலகளாவிய நிலையில், 6 மடங்கு உச்சத்திற்குச் சென்றது.
ஆனால் மற்ற நாடுகளை விட இதனை இந்தியா சிறப்பாக கையாண்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை முந்தைய அலைகளை விடக் குறைவு என்று அமைச்சு கூறியது.