ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு பல்கலைக்கழகத்தில் வன்முறை
புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளை அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி), டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகத்தின் காவேரி உணவு விடுதியில் புகுந்து, ராம நவமிக்கு சைவ உணவை மட்டுமே சமைத்துப் பரிமாற வேண்டும் என்றும் விடுதியில் அசைவ உணவுகளை வழங்கவிடாமல் தடுத்து கூச்சலிட்டு வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலால் மாணவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் 60 பேர் வரை காயமடைந்து உள்ளனர் என கூறப்படுகிறது.
இதுபற்றி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் அமைப்பு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், அவர்கள் (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) தடிகள், பூந்தொட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
"காவல்துறையிடம், மாலையில் வன்முறை நிகழக்கூடும் என முன்பே தகவல் தெரிவித்து இருந்தோம். எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
"வன்முறை சம்பவம் நடந்தபோது கூட, காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே அவர்கள் எங்களை மிரட்டினார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
"பல்கலைக் கழக நிர்வாகமும் கண்டனம் தெரிவிக்கவில்லை," என்று தெரிவித்து உள்ளது.
ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர்கள், கல்லூரி விடுதியின் இரவு உணவுப்பட்டியலை மாற்றக் கோரியும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் உணவு விடுதிக் குழு உறுப்பினர்களை வற்புறுத்தித் தாக்கினர். கல்லூரியில் இயங்கும் விடுதிகள் எல்லா இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொதுவான இடமாகும். அதை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது," என்று கல்லூரி அதற்கு மறுத்துவிட்டது.
இந்நிலையில், ஏபிவிபி அமைப்பைச் சாராத மாணவர்கள் சிலர், ராமநவமியை முன்னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி உணவு விடுதியில் வழிபாட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த வழிபாட்டில் ஏராளமான ஜேஎன்யு மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வழிபாட்டை நடத்தவிடாமல் தடுத்தனர்.
இந்த வழிபாட்டைத் தடுப்பதே அவர்களது உண்மையான நோக்கம் என்றும் உணவு உரிமை விவகாரத்தில் பொய்யான சலசலப்பை உருவாக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கல்லூரியும் அதன் விடுதி நிர்வாகமும் அளித்த புகாரை ஏற்று காவல்துறையினர் ஏபிவிபி அமைப்பின் உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.