புதுடெல்லி: குரங்கம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கான புதிய கருவியை இந்திய நிறுவனம் ஒன்று உருவாக்கி உள்ளது.
உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று குறித்து மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உலக மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, குரங்கம்மை தொற்று பாதிப்பைக் கண்டறிவதற்கான புதிய கருவியை உருவாக்கி உள்ளதாக சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ட்ரிவிட்ரான் ஹெல்த் கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
'ஆர்டி-பிசிஆர்' வகை பரிசோதனைக் கருவியான இதன் மூலம் குரங்கம்மை பாதிப்பை எளிதில் கண்டறிய முடியும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
"ஒருவரது உடலில் கிருமி இருந்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் இக்கருவி உறுதி செய்யும். மேலும், சின்னம்மை, குரங்கம்மைக்கு இடையே உள்ள வித்தியாசத்தையும் உணர்ந்து பரிசோதனை முடிவை தெரிவிக்கும்.
இதற்கிடையே, இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது. எனினும், உலக அளவில் பாதிப்பு அதிகரிப்பதால் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அம்மன்றம் கூறியது.