புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றாலும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சு.
அதில், குரங்கம்மை பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதற்கான பாதுகாப்பு நடைமுறைகள், உரிய பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, நோய் பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய பொருள்களை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்றும் கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்றும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
பாதிப்பு மேற்கொண்டு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தனிமைப்படுத்தலும் ஒன்று என்றும் பாதிக்கப்பட்டவர்கள், பாதிப்பு உள்ள பகுதிகள் இயன்ற விரைவில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது.
பாதிப்பு உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதும் அவர்களைக் கண்காணிப்பதும் மிக அவசியம் என்று குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு, சந்தேகத்துக்குரியவர்களின் மாதிரிகளை புனேவில் உள்ள தேசிய ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
"நோயாளிகளுக்கும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். முழுக் கவச உடை அணிய வேண்டும்.
"அதுபோல், குரங்கம்மை பாதித்த நாடுகளுக்குச் சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை அனைத்து மருத்துவமனைகளும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். மாநில அரசுகள் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்," என்றும் சுகாதார அமைச்சு தனது வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் கண்டறியப் பட்டாலும் அது எப்படி பரவியது, நோயால் பாதிக்கப்பட்டவர் எங்கிருந்து வந்தார் என்பன போன்ற தகவல்களை உடனடியாக சேகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கேரளாவில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்றாட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1,197 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பாதிப்புக்காக தற்போது 5,728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் புதிதாக 2,745 பேர் தொற்றுக்கு ஆளாகிஉள்ளனர்.
கேரளாவில் ஒரே நாளில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று