ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 12 சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைதாகி உள்ளனர்.
குஜராத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று நேற்று முன்தினம் கேரள மாநிலம் கோழிக்கோடு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதில் இருந்து 12 சிறுமிகளும் நான்கு பெரியவர்களும் இறங்கி, வெளியே செல்ல முயன்றனர்.
எனினும் அவர்களது நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகமடைந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக ரயில் பயணிகள் சிலரும்கூட காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட. விசாரணையின்போது, எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியார் ஆதரவற்றோர் காப்பகத்திற்கு சிறுமிகளை அனுமதியின்றி அழைத்து செல்வது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமிகளுடன் வந்த நான்கு பேரும் கைதாகினர். அவர்களில் இருவர் குழந்தை களைக் கடத்தும் இடைத்தரகர்கள் என்றும் மற்ற இருவரும் கடத்தி வரப்பட்ட இரு சிறுமிகளின் பெற்றோர் என்பதும் தெரியவந்தது.
சிறுமிகள் அழைத்துச் செல்லப்பட இருந்த காப்பகத்தை ஜேக்கப் வர்கீஸ் என்ற பாதிரியார் நடத்தி வருகிறார். இதையடுத்து அவரும் காவல்துறையிடம் சிக்கினார்.
விரிவான விசாரணைக்குப் பின்னர் சிறுமிகளுடன் வந்த பெற்றோர் மட்டும் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கேரள காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.