நியூயார்க்: ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபையின் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
யோகா பயிற்சியால் ஏற்படும் பல நன்மைகள் குறித்து உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இம்மாதம் 21ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூன் 21ஆம் தேதியை யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐநா, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி உலக முழுவதும் யோகா தினமாகக் கொண்டாடப்படும் என்று 2014 டிசம்பரில் அறிவித்தது.
இந்த நிலையில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் 9வது அனைத்துலக யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக யோகா தினம் அறிவிக்கப்பட்டு ஒன்பது ஆண்டு களுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையேற்பது இது முதல்முறை.
ஐநா சபையின் தலைமையகத்தில் உள்ள வடக்கு புல்வெளியில் ஜூன் 21ஆம் தேதி காலை எட்டு மணி முதல் 9 மணி வரை அனைத்துலக யோகா அமர்வு நடைபெறவுள்ளது.
இதில், ஐநா உயர் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஐ.நா. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், உலகளாவிய புலம்பெயர் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு 22ஆம் தேதியன்று வெள்ளை மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை திரு மோடி சந்திக்கிறார். அப்போது உக்ரேன் போர் குறித்து முக்கியமாக பேசப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தும் வகையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவிருக்கின்றன.
ஜூன் 22ஆம் மாலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமரை கௌரவிக்கும் வகையில் விருந்தளிக்கின்றனர்.
அடுத்த நாள் 23ஆம் தேதி அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீசும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கனும் மோடிக்கு மதிய விருந்தளிக்கவிருக்கின்றனர்.
பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் நிபுணர்கள் உள்ளிட்டோருடன் மோடி கலந்துரையாட உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் அவர் சந்திக்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி எகிப்து செல்கிறார்.