புதுடெல்லி: ஜி20 கூட்டமைப்பின் சில உறுப்பினர்களைக் கொண்டு உலக உயிர் எரிபொருள் கூட்டணி சனிக்கிழமை அன்று தொடக்கம் கண்டது.
இந்தியாவின் தலைமைத்துவத்தின்கீழ் ஜி20 அமைப்பில் சுத்தமான எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, அமெரிக்கா, பிரேசில், ஆர்ஜெண்டிணா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு சிற்றரசுகள், பங்ளாதேஷ் ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூரும் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
தொழில்நுட்ப மேம்பாடுகள் மூலமும் பலதரப்புப் பங்காளிகளுடனும் நீடித்த நிலைத்தன்மை மிக்க உயிர் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்தக் கூட்டணி இறங்கும்.
இந்தத் துறையில் அறிவாற்றலின் மையமாகவும் நிபுணத்துவத்தின் மையமாகவும் இந்தக் கூட்டணி விளங்கும்.
உலகளவில் உயிர் எரிபொருளை அதிகளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முனையும் பொருட்டு இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.