புதுடெல்லி: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் ஒரு சடலத்தை மூன்று காவலர்கள் கால்வாயில் வீசிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
மேம்பாலத்திலிருந்து ரத்தம் வழியும் சடலத்தை கால்வாயில் காவலர்கள் வீசுகின்றனர். இதை மேம்பாலத்தின்கீழ் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர்.
சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி 800,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
நாட்டின் ஏழ்மையான வளர்ச்சியற்ற மாநிலமான பீகாரில் ஏறக்குறைய 100 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர்.
“அதிவேகத்தில் வந்த வாகனத்தால் நபரின் உடல் நசுங்கி சிதைந்துவிட்டதால் கீழ்ப்பகுதி மட்டுமே கால்வாயில் வீசப்பட்டது,” என்று முஸாஃபர்புர் மாவட்ட காவல்துறை மூத்த அதிகாரியான ராகேஷ் குமார், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
முதியவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. மேற்பகுதி உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கீழ்ப்பகுதி அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்தது என்று அவர் கூறினார்.
ஆனால், சடலத்தைக் கால்வாயில் வீசியது மிகப்பெரிய தவறு. சம்பந்தப்பட்ட காவலர்களை தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கியுள்ளோம் என்றார் அவர்.
சமூக ஊடகத்தில் அந்தக் காணொளி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கால்வாயிலிருந்து உடற்பகுதிகளை மீட்க காவல்துறையினர் விரைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.