புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி மத்திய அரசு தடை செய்தது.
இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டதற்காக ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் எவரும் இரக்கமற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.
“பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையைப் பின்பற்றி ஜம்மு காஷ்மீர் ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை மத்திய அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது,”’ என்றார்.