கலை சார்ந்த புதிய திட்டம் ஒன்று, 5,000 ஆண்டு பழமை வாய்ந்த ரங்கோலியை மக்களுக்குக் கொண்டுவருகிறது. இந்திய கலைகளைப் பற்றியும் கலாசாரத்தைப் பற்றியும் இளம் தலைமுறையினர் ஆழமாக அறிந்திட இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்தப் புதிய இயக்கத்தின் பெயர் 'த ரங்கோலி மூவ்மண்ட்'. முதன்முதலாக சிங்கப்பூரில் ஒரு பாரம்பரிய கலை வடிவம், பிரம்மாண்டமாக கண்கவர், மின்னிலக்கக் கண்காட்சியாக நடைபெறவுள்ளது. இம்மாதம் 28ஆம் தேதியன்று தொடங்கும் கண்காட்சி, அடுத்த மாதம் 20ஆம் தேதியன்று முடிவுறும்.
லிட்டில் இந்தியாவின் கிளைவ் ஸ்திரீட்டில் கண்காட்சியைக் கண்டு ரசிக்கலாம். இயக்கத்தின் கருத்துருவாக்கத்தை 'டெக்ஸ்சர் மீடியா' நிறுவனம் திட்டமிட்டதாகக் கூறப்பட்டது. சில்லறை வர்த்தக மற்றும் வர்த்தக இடங்களில் இருவழித்தொடர்புடைய மின்னிலக்க ஊடக அம்சங்களைப் பொருத்துவதில் இந்நிறுவனம் பெயர் போனது. 'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் மற்றும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குகின்றன.
பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவமான ரங்கோலிக்கும் 'சிங்கரங்கோலி' கொள்கைகளுக்கும் இடையிலான தொடர்பை உணர்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
பல ஆண்டுகளாக ரங்கோலி போடும் கலையைப் பயின்று வந்தவர் விஜயா மோகன், 63. இவர் பாரம்பரிய ரங்கோலி வடிவத்தை மெருகேற்றியதில் உருவானதே 'சிங்கரங்கோலி'.
புதுமை, நவீனம், சமூகத்தைப் பிணைக்கும் தன்மை ஆகியவற்றை இக்குறிப்பிட்ட 'சிங்கரங்கோலி'யில் காண முடியும் என்கிறார் அவர்.
இசை, நடனம், மின்னிலக்க ஓவியம் ஆகியவற்றை மகிழ்ச்சி தரும் இருவழித்தொடர்புடைய காட்சியாக வழங்கும் இந்த ரங்கோலி இயக்கம், நான்கு மாதச் சமூகத் திட்டம் ஒன்றின் அங்கமாகும்.
தேசிய கலைகள் மன்றமும் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் இவ்வாண்டு ஜனவரியில் துவங்கிவைத்த இத்திட்டத்தின் பெயர் 'ஆர்ட் அரவுண்ட் த சிட்டி'.
இத்திட்டத்தின்படி கில்மன் பேரக்ஸ், டிசைன் ஆர்ச்சர்ட், லிட்டில் இந்தியா, சைனாடவுன் ஆகிய இடங்களில் கலை சார்ந்த அனுபவங்களை மக்கள் பெறலாம்.
ரங்கோலி கண்காட்சியைக் காண விரும்புவோர் கிளைவ் ஸ்திரீட்டில் பயன்படுத்தப்படாத இரு வெற்றுத் தளங்களை அணுகலாம். மொத்தம் மூன்று கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு கூடாரமும் வெவ்வேறு அனுபவத்தைப் பார்ப்பவருக்கு வழங்கும்.
கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.