முதியோருக்கு உதவும் அதேநேரத்தில், முதியோருக்கும் இளையர்களுக்குமிடையே இருக்கும் தலைமுறை இடைவெளியைக் கடக்கும் பாலமாகச் செயல்படுகிறது இளையர்களால் செயல்படுத்தப்படும் ‘ஜென்லாப் கலெக்ட்டிவ்’ அமைப்பு.
ஞாபகமறதி நோயால் அவதியுற்ற தனது பாட்டி அனுபவித்த சிரமங்களை பார்த்த, 28 வயது கீர்த்தனா பரமசிவத்திற்கு முதியோரிடையே ஏற்படும் மனநோய்களைக் கண்டறிந்து தீர்வு காணும் எண்ணம் ஏற்பட்டது.
மேலும், கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கம் அதிகமிருந்த கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முதியோர் தங்கள் இல்லங்களில் தனிமையில் அவதியுற்றதால் அவர்களது மனநலம் பாதிப்படைந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் விகிதம் அதிகரித்ததை கீர்த்தனா கண்டறிந்தார்.
முதியோரின் மனநலனைப் பேணும் நோக்குடன் அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புது திறன்களைக் கற்பிக்க எண்ணினார். இதில் இளையர்களை ஈடுபடுத்தினால் இரு தலைமுறையினரிடையே உள்ள பிணைப்பு வலுவடையும் என அவர் நம்பினார்.
எண்ணத்தைச் செயலாக்க, தேசிய சமூக சேவை மன்றத்தில் பணிபுரியும் கீர்த்தனா, 2021ஆம் ஆண்டு ‘ஜென்லாப் கலெக்ட்டிவ்’ அமைப்பைத் தொடங்கினார்.
முதியோருக்கு இன்றைய மின்னிலக்கமயமான உலகத்தில் தேவையான திறன்களைக் கற்றுத் தருவதுடன் இளையர்களுக்குத் தேவையான வாழ்க்கை விழுமியங்களையும் கற்பிப்பது இவ்வமைப்பின் நோக்கமாகும்.
தற்போது கீர்த்தனாவுடன் இவ்வமைப்பில் எட்டு தொண்டூழியர்கள் இணைந்து பணிபுரிகின்றனர். இவர்கள் ஏறக்குறைய 25 முதியோருக்கு கணினி, கைப்பேசி, மின்னிலக்க சாதனங்கள் போன்றவற்றைப் பற்றி கற்பிக்கின்றனர். இதன் மூலம், முதியோர் வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், வேலைகளுக்குச் செல்லலாம், வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம்.
இரு தலைமுறையினரிடையே உள்ள பந்தத்தை மேலும் வலுப்படுத்த ‘சாண்ட்பாக்ஸ்’ என்ற திட்டத்தையும் கீர்த்தனா அறிமுகப்படுத்தி னார்.
இத்திட்டத்தில் தற்போது இரு இளையர்களும் இரு முதியோரும் இணைந்து பல கலந்துறவாடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம், அவர்கள் ஒருவருடன் ஒருவர் பிணைப்புடன் செயல்பட்டு நல்லதொரு உறவை அமைக்க முடிகிறது என அவர் தெரிவித்தார். மேலும் பல இளையர்களையும் முதியவர்களையும் இணைக்கும் முயற்சியில் அமைப்பு ஈடுபட்டுள்ளது.
இவ்வமைப்பைத் தொடங்க தனக்கு தேசிய இளையர் மன்றத்தால் நடத்தப்பட்ட இளையர் செயல் சவாலில் கிடைத்த அங்கீகாரமே கீர்த்தனாவுக்கு முக்கியப் பக்கபலமாக அமைந்தது. தேசிய இளையர் மன்றத்தால்அமைப்புக்குத் தேவையான நிதிஉதவி வழங்கப்பட்டது.
தேசிய தொண்டூழிய, மக்கள் சேவை மையம் இடவசதி அளித்ததுடன், அமைப்பின் வளர்ச்சிக்கு உதவும் அறிவுரைகள் போன்றவற்றை வழங்கி உதவியது.
சிங்கப்பூர் கனிவன்பு தினத்தில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் மூலம், பல முதியோரும் இளையரும் இவ்வமைப்பில் ஒன்றிணையும் வாய்ப்பு அதிகரிக்குமென கீர்த்தனா நம்புகிறார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் அமைப்பைத் தொடங்கியதால், ஆள் பற்றாக்குறை, அனைத்து நடவடிக்கைகளையும் இணையம் வழி செய்ய வேண்டிய கட்டாயம் போன்ற பல சவால்களை கீர்த்தனா சந்தித்தார். எனினும், சிறந்த தொண்டூழியர் அணியைத் திரட்டி தற்போது வெற்றிகரமாக இவ்வமைப்பை வழிநடத்தி வருகிறார் கீர்த்தனா.
எதிர்காலத்தில் மேலும் பல அமைப்புகளும் நிறுவனங்களும் ‘ஜென்லாப் கலெக்ட்டிவ்’ அமைப்புடன் இணைந்து செயல்பட்டால் தனது இலக்கை வெற்றிகரமாக அடையமுடியும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
‘ஜென்லாப் கலெக்ட்டிவ்’ அமைப்புடன் இணைந்து தொண்டூழியம் செய்ய விரும்புவோர், அவர்களது இணையப்பக்கம் அல்லது ஃபேஸ்புக் பக்கத்தை நாடலாம்.