பதிமூன்றாவது ஆண்டாக வழங்கப்படும் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசுப் போட்டியின் பரிசளிப்பு விழா வரும் 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சிறுகதை, கவிதை, கட்டுரை என மூன்று துறைகளுக்குச் சுழல் முறையில் ஆண்டுதோறும் பரிசு வழங்கப்பட்டு வரும் இப்போட்டியில் இந்த ஆண்டு சிறுகதை நூலுக்குப் பரிசு வழங்கப்படும்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், ஆனந்த பவன் உணவகத்தின் ஆதரவுடன் அப்பரிசை வழங்கி வருகிறது.
அந்த உணவகத்தின் உரிமையாளராக இருந்த மறைந்த திரு மு.கு. இராமச்சந்திரா, தமிழ் ஆர்வலர் ஆவார். தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்கியவர் அவர். அவரது நினைவாக புத்தகப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
சையது ஆல்வி ரோட்டில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் மேல் மாடியில் பரசளிப்பு விழா மாலை 4 மணிக்குத் தொடங்கும்.
விழாவில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மதியுரைஞருமான முனைவர் சுப. திண்ணப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
நடுவர்களில் ஒருவரான சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழக இணை விரிவுரையாளரான முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் நடுவர்களின் கருத்து களை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வார்.