மோனலிசா
திரைப்பட ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட அண்மையில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் சிங்கப்பூர் எக்ஸ்போ மண்டபத்தில் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கிய முதல் ‘மெகா இந்தியா எக்ஸ்போ’ கண்காட்சியில் பங்குகொண்டனர்.
ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பங்குகொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த திரை நட்சத்திரங்கள் சிங்கப்பூருக்கு முதன்முதலில் வந்திருப்பதாக தெரிவித்தனர். சிங்கப்பூரின் விமான நிலையமே தங்களை வெகுவாக கவர்ந்ததாகக் கூறிய இவர்கள் இங்குள்ள கட்டடங்களும் உள்கட்டமைப்பும் பிரமிக்க வைப்பதாகவும் குறிப்பிட்டனர்.
இத்திரைப்படம் இங்குள்ள திரையரங்குகளில் வெளியாகி சிங்கப்பூர்த் தமிழ் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார் இத்திரைப்படத்தின் இயக்குநரும் கதாநாயகனுமான பிரதீப் ரெங்கநாதன். மேலும் தற்போது ‘ஓடிடி’ போன்ற தளங்களில் திரைப்படங்கள் வெளியாவது அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற வழி வகுக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
‘கோமாளி’ எனும் திரைப்படத்தை 2019ஆம் ஆண்டில் இயக்கியதன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் பிரதீப். ஆரம்பத்தில் குறும்படங்கள் இயக்கி வந்த இவர், சில ஆண்டுகாலம் மென்பொருள் பொறியாளராகவும் பணிபுரிந்துள்ளார். தன்னுடைய திரைப்படங்களின் முன்னோட்டக் காட்சியிலேயே கதையைக் கூறிவிடும் பாணியைப் பின்பற்றும் இவர் பார்வையாளர்கள் என்ன எதிர்பார்ப்புடன் படத்தைக் காண வேண்டும் என்பதை தானே விளக்குவது சரியானது என்று கருதுகிறார்.
இத்திரைப்படத்தில் பணியாற்றியது புதுவித அனுபவமாக இருந்தது என்று கூறிய கதாநாயகி இவானா, படப்பிடிப்பு நாள்களில் ஒரே வசனத்தை பல்வேறு பாணியில் கூறுவது போன்ற பல பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.
காலவரையறைக்குட்பட்டு திரைக்கதை எழுதுவதில் நாட்டம் இல்லை என்றும் தனக்கு மனநிறைவு ஏற்படும் வகையில் போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு திரைக்கதை எழுதுவதையே விரும்புவதாகவும் கூறினார் பிரதீப். தொடர்ந்து நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் இவர் கவனம் செலுத்த விரும்பினாலும் திரைப்பட இயக்கமே சவாலாக இருப்பதால் அதில் அதிக நாட்டம் இருப்பதாக இவர் கூறினார். சிங்கப்பூர் என்றாலே தனக்கு சிங்கத்தின் முகமே நினைவுக்கு வருவதாக கூறிய இவானா, தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். தற்செயலாக திரைத்துறையில் அடியெடுத்துவைத்த இவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டு சிறந்த நடிகையாக வலம்வர விரும்புவதாகவும் கூறினார்.
தற்சமயம் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் இவானா விரைவில் அதைப்பற்றிய தகவல்கள் வெளிவரும் என்றும் கூறினார். தன்னுடைய திரைப்பயணத்தில் என்றாவது ஒருநாள் மலையாள நடிகர் மோகன் லாலுடனும் நடிகை நயன்தாராவுடனும் இணைந்து நடிக்கும் கனவு உள்ளதாகவும் குறிப்பிட்டார். கண்காட்சியில் பங்கு கொண்ட இவர்கள் ரசிகர்களை நேரில் சந்தித்ததோடு அவர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.