இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த சிங்கப்பூர்ப் பணிப்பெண் ராம்தின்புயி, 25, பள்ளிப்பருவத்தில் கைப்பந்து விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டவர்.
இந்த விளையாட்டு மீதான அவரது வேட்கை, சிங்கப்பூரின் காலாங் திடல் வரை அவரைக் கொண்டு சென்றது.
“என் தந்தை ஒரு விவசாயி. என் தாயார்தான் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டார். 10ஆம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிப் பருவத்தில் என் பள்ளியையும் ஊரையும் பிரதிநிதித்து கைப்பந்து விளையாடியிருக்கிறேன்,” என்று ஐசாவல் நகரைச் சேர்ந்த குமாரி ராம்தின் கூறினார்.
குடும்பத்தை ஆதரிக்க இவர், 18 வயதுக்குப் பிறகு படிப்பைக் கைவிட்டு முழுநேரமாக வேலை பார்க்கத் தொடங்கினார்.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி இவர் சிங்கப்பூருக்கு வந்து பணியாற்றத் தொடங்கினார். இங்கு வசிக்கும் உத்தரப் பிரதேச குடும்பத்தினரின் வீட்டில் தற்போது அவர் பணியாற்றி வருகிறார்.
இவரைப் போன்ற, இந்தியாவின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த பணிப்பெண்கள் சிலர், அணி ஒன்றை உருவாக்கி பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்களுடன் கைப்பந்து ஆட்டத்தில் பொருதுகின்றனர்.
இதுகுறித்த நிழற்படங்களையும் காணொளிகளையும் சித்திரிக்கும் கண்காட்சி, இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்றது. ‘ஹோம் சிங்கப்பூர்’, ‘மைக்ரன்ட் ரைட்டர்ஸ் சிங்கப்பூர்’, ‘மெக்குவைரி பல்கலைக்கழகம்’ ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்தக் கண்காட்சி, 168 டைர்விட் ரோட்டிலுள்ள ‘அல்ட்ராசூப்பர்நியூ’ கலைக்கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் பெண்களின் உண்மையான, பன்முகத்தன்மை வாய்ந்த அடையாளத்தை அங்கீகரிப்பது கண்காட்சியின் நோக்கம் என்று கண்காட்சி ஏற்பாட்டாளரும் மெக்குவைரி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் இணைப் பேராசிரியருமான செல்வராஜ் வேலாயுதம் தெரிவித்தார்.
வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்களாக மட்டும் இவர்களைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறவேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கம் என்று இணைப் பேராசிரியர் செல்வராஜ் குறிப்பிட்டார்.