குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இயல்பாக, மனம் திறந்து தொலைபேசியில் பேசுவது ஏற்புடையது. என்றாலும் வேலையிட, வர்த்தகச் சூழலில் மேம்பட்ட, தரத்துடன் பேசுவது அவசியம். அவ்வாறு பேசும்போது இந்த ஐந்து குறிப்புகளை மனதில் கொள்வது நல்லது.
பேச்சில் திண்ணம்
கேள்விகளுக்கு ஒரு சொல் அல்லது அரை வாக்கியத்திற்குப் பதிலாக முழு வாக்கியங்களாக பதில் அளிப்பது உங்கள் குரலின் தெளிவையும் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும். இந்த நம்பகத்தன்மை பல்வேறு நல்ல வாய்ப்புகளை வழங்கும்.
ஏற்புடைய ஏற்ற இறக்கம்
சிலர் என்ன பேசினாலும் உறுதியின்றி கேள்வி கேட்பது போன்ற தொனியில் பேசுவர். குரலில் தவறான ஏற்ற இறக்கம் ஏற்படும்போது நமக்குத் தெரிந்த விவரங்களும் தெரியாததுபோல பிறருக்குத் தோன்றலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் அல்லது நம்பிக்கை பெறாதவர்களிடம் பேசும்போது குரலின் ஏற்றத்தாழ்வைக் கவனிப்பது நல்லது.
சில சொற்களைத் தவிர்க்கலாம்
சிலர் பேசும்போது , ‘அ.. அது…அதுவந்து…பாத்திங்கனா’ போன்ற தொடர்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவர். பேசுவதற்கு முன் எதைப் பேசப் போகிறோம் என்பதை இயன்றவரை உறுதி செய்வது நல்லது.
பேச்சில் நிதானம்
தொலைபேசியில் பேசும்போது வார்த்தைகளுக்கிடைய நிறுத்தி நிதானத்துடன் பேசினால் கேட்பவருக்கு தெளிவாக விளங்கும். அவசர நடையில் பேசும்போது குளறல் ஏற்படலாம்.
புரிதலைத் தெளிவுபடுத்துங்கள்
சில அழைப்புகளில் உரையாடுபவர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்க இணங்கலாம். அல்லது முக்கியமான தகவல்களைத் தெரிவிக்கலாம். நீங்கள் கூறிய தகவலை மீண்டும் ஒருமுறை சொல்லும்போது தவறான புரிதல் ஏற்படும் வாய்ப்புகள் குறைகின்றன. அதேபோல உங்களது முக்கிய தகவல்களை அழைப்பின் மறுமுனையில் இருப்பவர் திரும்பச் சொல்லும்படி கேட்கலாம்.
கொஞ்சம் சிரிங்க பாஸ்!
புன்னகையுடன் பேசும்போது பேச்சுத் தொனி இனிமையாக இருக்கும். சலிப்புத்தன்மை குறைந்து கவனமும் உற்சாகமும் அதிகரிக்கும். பேச்சுவார்த்தைகளால் நல்ல பலன் ஏற்படும் வாய்ப்பும் கூடும்.