சிங்கப்பூரர்கள் நால்வர் கென்டிங் மலைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் அவர்களின் கார் மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகிவிட்டது.
அதில் அந்த நால்வரும் காயம் அடைந்ததாக மலேசிய ஊடகம் நேற்று(மே 5) தெரிவித்தது.
இரண்டு கார்களும் மோதிக் கொண்டதை அடுத்து இரண்டுமே தலைகுப்புறக் கவிழ்ந்தன. விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டி வந்த 41 வயது மலேசிய ஆடவர் விபத்தில் மாண்டுவிட்டார்.
அந்த விபத்து வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 6.30 மணிக்கு நிகழ்ந்ததாக மலேசிய காவல்துறை கூறியது.
இரண்டு கார்களுமே ஜோகூரில் இருந்து மலாக்காவுக்குச் சென்று கொண்டிருந்ததாகவும் பருவநிலை நன்றாக இருந்ததாகவும் மழை பெய்யவில்லை என்றும் அலோர் காஜா மாவட்ட காவல்துறை தலைவர் அர்ஷாத் அபு கூறினார்.
காயமடைந்த நான்கு சிங்கப்பூரர்களின் உடல்நிலையும் சீராக இருந்ததாகவும் அவர்கள் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.
விபத்து பற்றி காவல்துறை புலன்விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.